செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்



 தேசியக் கருத்தரங்கம்-இரண்டாம் நாள் நிகழ்வுகள்
 மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) நடைபெறும் தேசியக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வுகள் 01-02-2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்குத் தொடங்கியது.
 அமர்வு – 3 இல் புதுவைப் பல்கலைக் கழக சுப்பிரமணிய பாரதி தமிழ் உயராய்வு மையப் பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி, செந்தமிழ் இதழில் பண்டைத் தமிழ் அரசர்கள் குறித்த ஆய்வுகள்என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார். 
 அடுத்து, மதுரை யாதவர் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர்(ஓய்வு),அறிஞர் இரா.கோதண்டபாணி,தம் முனைவர் பட்டப்பேற்றிற்கு 1902 முதல் 1985 வரை வெளிவந்துள்ள செந்தமிழ் இதழ்களை”செந்தமிழ் இதழின் தோற்றமும் வளர்ச்சியும்” மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் ”செந்தமிழ் இதழில் விவாதக் கட்டுரைகள்என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார்.
   இவர் தம் ஆய்வுரையில் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் 1902 ஆம் ஆண்டிலிருந்து 110 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு வரும் செந்தமிழ் என்னும் இலக்கிய இதழில் விவாதக்கட்டுரைகள் இடம் பெற்ற சூழலையும்,வாதம் வளர்ப்பது பேதம் வளர்ப்பதாகாது என்ற நிலையில் ஆரோக்கியமான மெய்ம்மையக் காணும் ஆராய்ச்சி முறையில் அறிவு சார்ந்த முறையில் தருக்க நெறியில் விவாதக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன என்று கூறினார்.மேலும்,
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் (1901) நிறுவியும் செந்தமிழ் (1902) என்னும் இலக்கியப் பொக்கிஷத்தை தமிழுலகிற்கு வழங்கியவருமான பொன்.பாண்டித்துரைத் தேவர், இத்தகைய தமிழாய்வுகள் தமிழ் மொழி, இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் என்று விரும்பினார். இரா..இராகவையங்கார் மு.இராகவையங்கார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார், சி.கணேசயர், முத்துத் தம்பிப் பிள்ளை, கோவிந்தசாமி சோழகர், மு.ரா.கந்தசாமிக் கவிராயர், மு.சாம்பசிவநாயனார், திரு.நாராயணையங்கார் போன்றோரின் ப்ன்முக விவாதக் கட்டுரைகள் செந்தமிழ் இதழில் இடம்பெற்று வலம் வந்த சிறப்புக்கள் குறித்த அரும்பெரும் செய்திகளை வழங்கினார்.


 
  அமர்வு – 4 இல், புதுவைப் பல்கலைக் கழக சுப்பிரமணிய பாரதி தமிழ் உயராய்வு மையப் பேராசிரியர் முதுமுனைனவர் சா.அறிவுடைநம்பி, செந்தமிழ் இதழில் சங்கத் தமிழ்ப் புலவர்கள் என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள தமிழ்ப் புலவர்கள் நல்லந்துவனார், அரிசில்கிழார், நக்கீரனார் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை மேலாய்வு செய்து அருமையான ஆய்வுரை வழங்கினார்.  அடுத்து, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் முனைவர் மே.து.ராசுக்குமார் அவர்கள் செந்தமிழ் இதழில் சங்கப் பொருளியல் ஆய்வுகள்என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினார். பொருளாதாரம் குறித்து செந்தமிழ் இதழில் சிந்தித்துள்ள தரவுகளைப் புலப்படுத்தினார்.
 அமர்வு – 5 இல், மதுரை காமராசர் ப்ல்கலைக் கழகத் தொலைதூரக் கல்வி மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் தூ.சேது பாண்டியன் அவர்கள் செந்தமிழ் இதழில் உரையாசிரியர்கள்என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய, இலக்கண உரையாசிரியர்கள் குறித்த கட்டுரைகள் பற்றி விரிவான ஆய்வுரை நிகழ்த்தினார்.
 அடுத்து,முனைவர் கோ.சங்கரம்மாள் செந்தமிழ் இதழில் சிலப்பதிகாரப் பாத்திரங்கள் என்னும் தலைப்பில் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் வழி சிறந்ததொரு ஆய்வுரை வழங்கினார்.
அடுத்து, மதுரை காமராசர் பல்கலைக் கழக சைவசித்தாந்தத் துறைப் பேராசிரியை முனைவர் மு.தேவகி அவர்கள் செந்தமிழ் இதழில் மணிமேகலை என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.        
        
 
  அடுத்து, திருவையாறு அரசர் கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர்.ச.திருஞானசம்பந்தம் அவர்கள் செந்தமிழ் இதழில் புறநானூற்றுக் கட்டுரைகள் என்னும் தலைப்பில் பல்வேறு தரவுகள் செந்தமிழ் இதழில் பொதிந்து கிடக்கின்றன என்ற அரிய செய்திகளுடன் ஆய்வுரை வழங்கினார். 
 அடுத்து, செந்தமிழ் கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சு.விஜயன் செந்தமிழ் இதழில் நக்கீரர் குறித்த ஆய்வுகள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
ஒவ்வொரு ஆய்வறிஞர்களின் உரைகளுக்குப் பின் பங்கேற்பாளர்களின் வினாக்களுக்குப் பதிலுரைக்கப் படுதலும், ஐயங்கள் தெளிவு படுத்தலும் சிறப்பிற்குரிய தன்மையாக விளங்கின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக